header

அண்மையவை

வினைச்சொல் - Vinaichol

வினைச்சொல்

வினைச்சொல்


செயலை உணர்த்தி வரும் சொல் வினைச்சொல் எனப்படும். உலகில் எல்லா மொழிகளிலும் வினைச்சொல்லே உயர் அந்தஸ்தை பெறுகிறது. வினைச்சொல்லை வினைச்சொற் கிளவி, தொழிற்சொற் கிழவி, காலக்கிளவி என பலவாறாக தொல்காப்பியர் சுட்டுகிறார்.

வினைச் சொல் பற்றி நன்னூலார் கூறும்போது

" செய்பவன் கருவி, நிலம், செயல், காலம்
செய்பொருள் ஆறுந் தருவது வினையே"
எனக் குறிப்பிடுகிறார். 

அதாவது செய்பவராக கருத்தா, செயல் செய்யப்படும் கருவி, செயல் நிகழ்ந்த இடம், செய்யப்பட்ட செயல், செய்யப்பட்ட காலம், செய்யப்பட்ட பொருள் ஆகிய ஆறினையும் தருவது வினைச்சொல் ஆகும் என்று குறிப்பிடுகிறார். இவ் வினைச் சொற்கள் சில தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளன.  

அவை பற்றி தொல்காப்பியர்

"வினையெனப்படுவது வேற்றுமை கொள்ளாதுநினையுங் காலை காலமொடுதோன்றும்"

என்று குறிப்பிடுகிறார்.

வினைச்சொற்களின் தனித்துவமான பண்புகள் சில

•  செயலை உணர்த்தும்
வினைச்சொற்களின் பொதுவான , பிரதான பண்பு செயலை உணர்த்துவதாகும்.
உ-ம்  : போ, வா, இரு, படித்தான், ஓடியது

•  காலங் காட்டும்.

இதுவும் வினைச் சொற்களின் பொதுவான பண்புகளுள் ஒன்றாகும்.  வினைச்சொல்லானது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்தையும் காட்டும். 

உ - ம் படித்தான், படிக்கிறான், படிப்பான்

குறிப்பு: தமிழ் இலக்கண நூல்கள் கூறுகின்ற குறிப்பு வினைகள் காலங்காட்டுவதில்லை.


•  ஏவல் பொருளில் வரும்

ஒரு செயலைச் செய்யுமாறு பணித்தல் ஏவல் எனப்படும்.  வினையடிகள் யாவும் ஏவல் பொருளில் வருவதை அவதானிக்கலாம். அத்துடன் வினைச் சொற்கள் ஒரு செயலைச் செய்யுமாறு பணிப்பதால் ஏவல் பொருளில் வருகின்றன.

உ - ம் : வா, போ, இரு
வாருங்கள், தாருங்கள், இருங்கள்

•  வேற்றுமை உருபை ஏற்பதில்லை

வினைச் சொற்களின் முக்கிய பண்புகளில் ஒன்று வேற்றுமை உருபை ஏற்காதது ஆகும். பழந்தமிழில் வினைச்சொற்கள் வேற்றுமை உருபுகளை ஏற்று வரும் போது அது வினையாலணையும் பெயர் என கொள்ளப்படும்.

உ - ம் : நடந்தான் + ஐ = நடந்தானை


குறிப்பு : பெரிய, அழகான போன்ற பெயரடைகளும் மெதுவாக, பணிவாக போன்ற வினை அடைகளும் அந்த, இந்த போன்ற சுட்டடைகளும் வேற்றுமை உருபை ஏற்பதில்லை. இருப்பினும் இவை வினைச்சொற்கள் அல்ல.


•  வினை விகுதிகளை பெற்று வரும்.

வினைச்சொற்கள் திணை, பால், எண், இட விகுதிகள், பெயரெச்ச வினையெச்ச விகுதிகள், ஏவல் வியங்கோள் விகுதிகள், எதிர்மறை இடைநிலைகள் முதலியவற்றை பெற்று வரும்.

• திணை, பால், எண், இட விகுதிகள்.
•  கண்டேன் - ஏன்
•  கண்டோம் - ஓம்
•  கண்டாய் - ஆய்
•  கண்டான் - ஆன்
•  கண்டாள் - ஆள்
•  கண்டார் - ஆர்
•  கண்டார்கள் - ஆர்கள்
•  கண்டது - அது
•  கண்டன - அன

• அ, உம் விகுதிகள்.
•  கண்ட - அ
•  காணும் - உம்

• உ, இ விகுதிகள்
•  கண்டு - உ
•  தேடி - இ

•  வினையடைகளை பெற்று வரும் வினைச்சொற்கள் மெதுவாக, வேகமாக, அழகாக, நேரடியாக போன்ற வினையடைகளை பெற்று வரும்.
உ-ம் : மெதுவாக நடந்தான்.
வேகமாக ஓடினாள்.
அழகாக சிரித்தாள்.
நேரடியாக பேசினான்.


வினைச் சொற்களின் வகைகள்


வினைச் சொற்களானது அவற்றின் அமைப்பு, பொருள், வாக்கியத்தில் அவற்றின் தொழிற்பாடு என்பவற்றின் அடிப்படையில் பல வகையாக வகைப்படுத்தப்படுகின்றன. அவையாவன

•  தனி வினையும் கூட்டுவினையும்
•  தன்வினையும் பிறவினையும்
•  செய்வினையும் செயற்பாட்டு  வினையும்
•  ஏவல் வினை
•  வியங்கோள் வினை
•  முற்றுவினையும் எச்சவினையும்

கருத்துகள் இல்லை