header

அண்மையவை

தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பு முறை பகுதி _ 1 - உயிர் எழுத்துக்களின் உச்சரிப்பு முறையும் ஒலி வேறுபாடும்


தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பு முறை


எழுத்துக்கள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை ஒலியணுக்கள் ஆகும். எழுத்துக்களை உச்சரிக்கும் போது சுவாசப்பையினுள் எழும் காற்றானது மார்பு , கழுத்து, தலை, மூக்கு ஆகியவற்றை பொருந்தி உதடு, நாக்கு, பல், மேல்வாய் (அண்ணம்) ஆகிய உறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாக பிறக்கின்றன. 

  • எழுத்துகளின் பிறப்பு இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது.
    1. இடப்பிறப்பு
    2. முயற்சிப் பிறப்பு

எழுத்துக்கள் தோன்றுகின்ற மார்பு , கழுத்து, தலை , மூக்கு ஆகியவற்றை இடப்பிறப்பு என்றும், உதடு , நாக்கு, பல், அண்ணம் ஆகிய உறுப்புகளின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதனை முயற்சி பிறப்பு என்றும் அழைப்பர்.


உயிர் எழுத்துக்களின் உச்சரிப்பு முறை

உயிர் எழுத்துக்களின் உச்சரிப்பு முறையை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.


01. உதடுகளை(இதழ்களை)  அடிப்படையாக வைத்து உயிர் எழுத்துக்களின் உச்சரிப்பு முறையை பின்வருமாறு  2ஆக வகைப்படுத்தலாம்.

இதழ் குவிந்த உயிர்

உ, ஊ, ஒ , ஓ , ஔ ஆகிய உயிர்களை உச்சரிக்கும் போது உதடுகள் ( இதழ்கள்) இரண்டையும் குவித்து உச்சரிக்கின்றோம். ஆகவே இவை இதழ் குவிந்த உயிர் எனப்படும்.

இதழ் குவியா உயிர்

அ , ஆ , இ , ஈ , எ , ஏ, ஐ ஆகிய உயிர்களை உச்சரிக்கும் போது இதழ்களை குவியாமல் உச்சரிக்கின்றோம். இவை இதழ் குவியா உயிர் எனப்படும்.


02. நாக்கில் ஏற்படும் அதிர்வுகளின் அடிப்படையில் எழுத்துக்களின் உச்சரிப்பு முறையினை பின்வருமாறு வகைப்படுத்தலாம்

1. முன் உயிர்

பின்வரும் உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் போது நாக்கின் முன்பகுதி விறைப்படைகின்றது அதனால் இவற்றை முன் உயிர் என்பர். அவையாவன

  • இ,ஈ,எ,ஏ

2. பின் உயிர்

பின்வரும் உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் போது நாக்கின் பின் பகுதி விறைப்படைகின்றது  அதனால் இவற்றை பின் உயிர் என்பர். அவையாவன

  • உ,உ,ஒ,ஓ

3. இடை  உயிர்

பின்வரும் உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் போது நாக்கின் நடுப்பகுதி விறைப்படைகின்றது ஆகையினால் இவற்றை இடையுயிர் என்பர்.அவையாவன

  • அ,ஆ

03. நாக்கின் அசைவினை அடிப்படையாகக் கொண்டு உயிர் எழுத்துக்கள் மூன்று வகையாக உச்சரிக்கப்படுகின்றன

1. மேல் உயிர்

பின்வரும் உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் போது நாக்கு மேல் நோக்கி எழும் ஆகவே இவை மேல் உயிர் என அழைக்கப்படுகின்றன. அவையாவன

  • இ, ஈ, உ, ஊ

2. கீழ் உயிர்

பின்வரும் உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் போது நாக்கு கீழ் நோக்கி செல்கின்றது ஆகவே இவை கீழுயிர் என அழைக்கப்படுகின்றன. அவையாவன

  • அ, ஆ

3.நடு உயிர்

பின்வரும் உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் போது நாக்கானது  மேல்நோக்கி எழாமலும் கீழ்நோக்கி தாளாமலும் நடுநிலையில் நிற்கின்றது இதனால் இவற்றை நடு உயிர் என்பர். அவையாவன

  • எ, ஏ, ஒ, ஓ

இதுவரை நோக்கியதில் இருந்து உயிர் எழுத்துக்களை உச்சரிப்பின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தலாம்


உயிர் எழுத்துகளின் உச்சரிப்பு முறை


உயிர் எழுத்துக்களின் ஒலி வேறுபாடு

தமிழில் பின்வரும் உயிர் எழுத்துக்களும் இருவேறு விதமாக உச்சரிக்கப்படுகின்றன
இவ்வேறுபாடுகளை பின்வரும் சொற்களை உச்சரிப்பதன் மூலம் அறிய முடியும்.

இ இருவேறு விதமாக உச்சரிக்கப்படுவதை பின்வரும் சொற்களின் மூலம் அறியலாம்.

தொகுதி 1

  • இது      இனி      இலை
  • இவர்    திசை     நிலம்
  • வலி      புலி        வழி
தொகுதி 2

  • இடம்       இணை      இளமை
  • இழிவு     இறகு         கிடை
  • பிணை   மிளகு         சிறகு

ஈ இருவேறு விதமாக உச்சரிக்கப்படுகின்றது

தொகுதி 1
  • ஈசன்    ஈகை     ஈயம்
  • தீது       நீலம்    வீரம்
  • வீதி      பீதி       சரீரம்
தொகுதி 2
  • ஈழம்      ஈடு        ஈறல்
  • நீளம்    வீண்     வீறு
  • கீழே    கீறல்     தீட்டு

எ இரு வேறு விதமாக உச்சரிக்கப்படல்

தொகுதி 1
  • எலி          எருது             எவர்
  • செய்தி    மென்மை     எல்லாம்
  • தெரு       வெயில்        வெற்றி
தொகுதி 2
  • எட்டு          எண்ணை   எள்ளு
  • எளிமை    எறும்பு         கெடுதி
  • வெறுப்பு   வெளி          பெண்

ஏ இருவேறு விதமாக உச்சரிக்கப்படுகின்றது

தொகுதி 1
  • ஏலம்       ஏது           ஏன்
  • ஏர்           தேர்தல்    கேலி
  • நேற்று    பேய்         சேதி
தொகுதி 2
  • ஏடு                ஏழு           ஏணி
  • கேள்வி        ஏறு           கேடு
  • வேண்டும்   வேடம்      ஏழை

உ இருவேறு விதமாக உச்சரிக்கப்படுகிறது

தொகுதி 1
  • உரல், உமி, உயரம், முயல், குயில், குடல்
தொகுதி 2
  • பாக்கு பட்டு பஞ்சு பசு அது இது எழுது

மேற்குறிப்பிட்ட வற்றில் தொகுதி ஒன்றில் காணப்படும் சொற்களில் உள்ள இ, ஈ, எ,ஏ, உ ஆகிய எழுத்துக்கள் நாம் தனித்து அவற்றை உச்சரிப்பது போலவே உச்சரிக்கப்படுகின்றன எனினும் தொகுதி இரண்டில் காணப்படும் சொற்களில் உள்ள இவ் எழுத்துக்கள் வேறுவிதமாக உச்சரிக்கப்படுவதை காணலாம்.


தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பு முறை பகுதி 2

கருத்துகள் இல்லை