தொடர் மொழிக்கு ஒரு மொழி - பகுதி 02
தொடர்மொழிக்கு ஒரு மொழி எனும் பகுதியில் இது இரண்டாவது பகுதி. முதல் பகுதியினைக் காண அதன் இணைப்பானது இந்தச் சொற்களின் இறுதியில் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களாகிய நீங்கள் அதனையும் கற்று உங்களின் தமிழறிவினை விருத்தி செய்து கொள்ளுங்கள்.
• அகாலமரணம் : வயோதிபம் அடைந்து இறக்காமல் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் மரணம் சம்பவித்தல்.
• அங்கதம் : வெளிப்படை பொருளில் புகழ்ந்து மறை பொருளில் இகழ்ந்தும் கூறுவது.
• அரங்கேற்றம் : அறிஞர் பலர் கூடிய சபை நடுவே புதிதாக ஆக்கப்பட்ட நூலையோ அல்லது ஒரு கலை நிகழ்வு படித்தோ அல்லது செய்து காட்டியோ அச் சபையினரை ஏற்றுக் கொள்ளச் செய்தல்.
• அஞ்ஞாதவாசம் : பிறர் தம்மை இன்னாரென்று அறியாதவாறு மாறுவேடம் பூண்டு மக்கள் மத்தியில் வசித்தல்.
• அட்டாவதானி : ஒரே நேரத்தில் எட்டு விடயங்களை அவதானித்தல்.
• அல்லங்காடி : மாலையிலோ அல்லது இரவிலோ கூடும் சந்தை.
• அலி : ஆணும் பெண்ணும் இல்லாத தன்மை
• அனுபந்தம் : ஒரு நூலின் இறுதியில் சேர்க்கப்படும் பகுதி.
• அமங்கலி : கணவனை இழந்த பெண்
• அழைப்பாணை : குறித்த ஒருநாளில் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கும்படி ஒருவருக்கு நீதிபதியால் விடுக்கப்படும் அதிகாரபூர்வமான கட்டளை.
• அகழி : கோட்டையை சுற்றி அமைந்த நீர்நிலை
• அட்டில் : உணவு வகைகளை ஆக்கும் இடம்.
• அகதி : அனைத்து உடைமைகளையும் இழந்தவன்
• அசகாயசூரன் : யார் துணையுமின்றி தனியே நின்று பகைவரை வெல்லும் திறன் படைத்தோன்.
• அவிசு : வேள்வியில் தேவருக்கு சமைக்கும் உணவு / உப்பின்றி சமைத்த பச்சை அரிசி சாதம்
• அறம் பாடுதல் : பிறருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியனவாக சொற்களையும் சொற்றொடர்களையும் சேர்த்து கவிபாடல்
• அந்தாதி : ஒரு செய்யுளின் அந்தம் அடுத்த செய்யுளின் ஆதியாக வரத் தொடுப்பது
• அருள்புரி பத்திரம் : அரசன், ஒருவனது சேவகம், கைங்கர்யம் முதலியவைகளை வியந்து கொண்டாடி அவனுக்கு கிராமம் முதலியவற்றை கொடுத்ததற்கு சாதனமாக எழுதிக்கொடுக்கும் பத்திரம்.
• அரும்பொருட் சாலை : பண்டு தொட்டு இன்று வரையிலான நூதன பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும் இடம்
• ஆத்திகன் : கடவுள் இருக்கிறார் என நம்புபவன்.
• ஆதனம் : ஒருவருக்குரிய நிலம் முதலிய சொத்துக்கள்
• ஆதுலர்சாலை : வறியவர்க்கும், அங்கவீனர்களுக்கும், முதியோருக்கும் உண்டியும், உறையுளும் அளித்து ஆதரிக்கும் இடம்.
• ஆவணம் : உரிமை கொண்டாடுவதற்குச் சான்றாக எழுத்துருவில் அமைந்த பத்திரம்.
• ஆகுதி : வேள்வியில் மந்திரபூர்வமாகச் செய்யப்படும் ஓமம்.
• ஆதீனம் : சமயப்பணி புரியும் மடம்.
• இடக்கரடக்கல் : சபையில் சொல்லத்தகாத சொல்லை மறைத்து வேறு வகையில் கூறுதல்.
• இரட்டுறமொழிதல்: இரண்டு பொருள்படக் கூறுதல்.
• இராக்கதம் : பெண்ணும் சுற்றமும் உடன்படாமல் வலிந்து கொள்ளும் மணம்.
• இலக்கணப்போலி: இலக்கணம் இல்லாததாயினும் இலக்கணமுடையதாக தொன்றுதொட்டு சான்றோரால் வழங்கப்படுவது.
• இரவுக்குறி: களவுப்புணர்ச்சியில் இரவுநேரத்தில் சந்திக்க நியமிக்கும் இடம்.
• ஈமக்கிரியை: ஒருவர் இறந்ததன் பின்னர் செய்யப்படுகின்ற சமயச்சடங்குகள்.
• உப்பரிகை : செல்வந்தர்களின் வீடுகளில் ஓய்வு நேரங்களில் கூடியிருந்து பொழுது போக்குவதற்காக அமைக்கப்பட்ட மேல் மாடம்.
• உயர்வு நவிற்சி : ஒன்றின் இயல்புநிலைக்கு மேல் உயர்த்திக் கூறுவது.
• உரைகல் : பொன்னை உரசி அதன் தரத்தை அறிந்து கொள்வதற்கு உபயோகிக்கப்படும் ஒருவகைக் கல்.
• உழுவலன்பு : பல பிறவிகள் தோறும் தொடர்ந்து வரும் அன்பு.
• உடன்போக்கு: தலைவி தலைவனுடன் செல்லல்.
• உழைச்செல்வன் : நோயாளிக்குப் பக்கத்தில் இருந்து மருந்து முதலியன கொடுப்பவன்.
• உளறுதல் : அனைத்து விடயங்களையும்/இரகசியங்களை வெளிப்படையாகக் கூறுதல்.
• உலோகாயுதன் : உலகமும், உலக இன்பங்களும் மாத்திரமே மெய் என்றும் கடவுளோ மறுமையோ இல்லை என்று வாதிப்பவன்.
• எதுகை : செய்யுள்களில் வரும் அடிகளில் / வாக்கியத்தில் இடம்பெறும் சொற்களில் இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது.
• எய்ப்பில் வைப்பு : முதுமைக் காலத் தேவைகளுக்காக சேமித்து வைக்கப்படும் பொருள்.
• எட்டிப்பரவு : வணிகத்தில் சிறந்தோருக்கு அரசன் கொடுத்த பூமி
• ஏகபோகம் : ஒருவர் முழுப்பொருளையும் தானே அனுபவித்தல்.
• ஒத்திகை : கலைநிகழ்வுகளை மேடையேற்றுவதற்கு முன் சரி, பிழை பார்த்து திருத்தும் நிகழ்வு.
• ஒட்டுண்ணி : மற்றொரு உயிரிலிருந்து தன் உணவை உறிஞ்சி வாழும் உயிரினம்.
ஒப்பாரி : ஒருவர் இறந்த பின்னர் அவரை நினைத்துப் பாடப்படும் பாடல்.
• ஒப்புரவு : உலக நடை அறிந்து ஒழுகுதல்.
• ஒற்றி : சொத்தை அனுபவிக்கும் உரிமையுடன் கூடிய அடைமானம்.
• ஓம்படை : ஒருவரை பேணிப்பாதுகாத்துத் தருமாறு இன்னொருவரிடம் ஒப்படைத்தல்.
• ஓலக்கம் : அரசனது சபா மண்டபத்திலே அமைச்சர், படைத்தலைவர், அறிஞர் முதலியோர் வீற்றிருக்கும் இடம்.
• ஓய்வூதியம் : அரச சேவையிலிருந்து இளைப்பாறிய ஒருவருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் பணம்.
• ஒப்புரவு : உலக நடை அறிந்து ஒழுகுதல்.
• ஒற்றி : சொத்தை அனுபவிக்கும் உரிமையுடன் கூடிய அடைமானம்.
• ஓம்படை : ஒருவரை பேணிப்பாதுகாத்துத் தருமாறு இன்னொருவரிடம் ஒப்படைத்தல்.
• ஓலக்கம் : அரசனது சபா மண்டபத்திலே அமைச்சர், படைத்தலைவர், அறிஞர் முதலியோர் வீற்றிருக்கும் இடம்.
• ஓய்வூதியம் : அரச சேவையிலிருந்து இளைப்பாறிய ஒருவருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் பணம்.
தொடர்மொழிக்கு ஒருமொழி பகுதி 01ற்குள் செல்ல இங்கே அழுத்தவும்
சரணாகதி
பதிலளிநீக்கு